பெங்களூரு, டிச. 8: பெங்களூரு பூர்வா பாம்பீச் அடுக்குமாடிக் கட்டிடத்தின் தமிழ்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே”.
-திருமந்திரம்
அகல்,எண்ணெய், திரி, சுடர் என்று பலவாறாகத் தோன்றும் விளக்கு என்பது ஒளியில் ஒன்று படுவது போல, பலவாறாகத் தோன்றும் பிரபஞ்சமும், ஜீவனும் பரம் பொருளான சிவத்தில் அடங்கும் என்பது இதன் உட்பொருள்.
தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை திருநாள் என்பதும் நம் நினைவிற்கு வருவது தீப விளக்குகளும், திருவண்ணாமலை தீபமும் தான்.
முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலை அடிவாரத்தில் பரணி தீபமும், மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
இத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த கார்த்திகை திருநாளை வழிபடும் விதமாக உலக நன்மைக்காக தீப வழிபாடு செய்யும் வகையில், பெங்களூரு, ஹென்னூர் சாலையில் அமைந்துள்ள பூர்வா பாம்பீச் அடுக்குமாடிக் கட்டிடத்தின் தமிழ்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கார்த்திகை திருவிழா, டிசம்பர் 6 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது.
அருள்மிகு அருணாசலேசுவரர் அருள்மிகு உண்ணாமுலையம்மை திருஉருவப்படத்திற்கு குடியிருப்பு வாழ்மக்கள் அனைவரும் ஒன்று கூடிதீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். வழிபாட்டைத் தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் கூடி கந்தஷஷ்டி கவசம் மற்றும் லிங்காஷ்ட கம்பாராயணம் செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபம் பற்றிய சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். விழாவிற்கு வருகை புரிந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு, பட்டாசு வழிபாட்டுடன் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கலை நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்குபெற்ற குழந்தைகளை வாழ்த்தி பாராட்டும் வகையில் தமிழ்சங்கத்தின் சார்பில் கேடயம் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. சிறப்பான சேவை புரிந்த நடனம் மற்றும் பாடல் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.