பெங்களூரு, ஆக. 6: அகில பாரத பவசார க்ஷத்ரியர்களின் வளர்ச்சிக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும் என்று கர்நாடக மாநில குடும்ப நல சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரு, வசந்த்நகர், பி.ஆர்.அம்பேத்கர் பவனில் ஞாயிற்றுக்கிழமை அகில பாரத பவசார க்ஷத்ரிய சமூகத்தின் மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார். மேலும் பவசார க்ஷத்ரிய சமூகத்தினர் எந்த கோரிக்கைகாவும் அரசை நாடுவதில்லை. ஆனால் அவர்கள் தற்போது சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவற்றை முதல்வருடன் விவாதித்து, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்.
கர்நாடகத்தில் இந்த சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். ஜவளி, துணி வியாபாரம், தையல் உள்ளிட்ட தொழில்களில் இந்த சமூகத்தின் அதிக எண்ணிக்கை ஈடுபட்டு வருகின்றனர். சிறிய சமூகம் என்றாலும், மிகவும் பின் தங்கிய சமூகமாக உள்ளது. எங்கள் அரசு அனைத்து சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பிற்படுத்த சமூகங்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. குறிப்பாக சிறிய அளவிலான எண்ணிக்கையில் உள்ள சமூகங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அகில பாரத பவசார க்ஷத்ரியர்களின் வளர்ச்சிக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும்.
அரசின் திட்டங்களை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு உங்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனை நீங்கள் உபயோகித்துக் கொள்ள வேண்டும். உங்கள் சமூக வளர்ச்சிக்கான போராட்டத்தில் நானும், துணை சபாநாயகர் ருத்ரப்பா லம்மாணி உள்ளிட்டோர் உறுதுணையாக இருப்போம் என்றார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ருத்ரப்பா லமாணி, பவசார க்ஷத்ரியர் சமூகத்தின் மாநிலத் தலைவர் என்.வி.ஸ்ரீனிவாஸ் ராவ் பிஸ்சே, அச்சமூகத்தின் மாநில உயர்நிலைக் குழுவின் தலைவரும், மகாசபை கூட்டத்தின் தலைவருமான ஆர்.ரமேஷ் டாப்சே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.