பெங்களூரு, ஏப். 8: புலிகேசி நகர் தொகுதிக்கு அகண்ட சீனிவாச மூர்த்தியை காங்கிரஸ் கட்சி மேலிடம் விரைவில் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கோவில் மற்றும் பள்ளி வாசலில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அகண்ட சீனிவாச மூர்த்தி 97,574 வாக்குகள் பெற்று 81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பதிவான வாக்குகளில் 77.18% வாக்குகளை பெற்ற அகண்ட சீனிவாச மூர்த்தி மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2023/04/c6277b90-88d8-476a-8e33-c38ef69f8b6a.jpg)
இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 182 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பட்டியலிலும் அகண்ட சீனிவாச மூர்த்தி பெயர் அறிவிக்கப்படாத நிலையில், அவரது பெயர் விரைவில் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் சனிக்கிழமை கோவில் மற்றும் பள்ளி வாசலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
புலிகேசி நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள தங்க மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும் கோசர் பள்ளி வாசலில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆதரவாளர் அகண்ட சீனிவாச மூர்த்தி விரைவில் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2023/04/fc965468-8792-4656-8e7e-380e80ab94eb.jpg)
ஜாதி மத பேதமின்றி அகண்ட சீனிவாச மூர்த்திக்காக தாங்கள் ஒன்றிணைந்து பிராத்தனை செய்து வருவதாகவும், அவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்து, புலிகேசிநகர் தொகுதியில் அவரை நிறுத்தினால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அகண்ட சீனிவாச மூர்த்தியை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம். அவர் தொகுதியில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செய்துள்ளதோடு, மழை காலத்தில் தாழ்ந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுவதை தடுத்துள்ளார்.
அவரைப் போன்றவர் மக்கள் பிரதிநிதியானால்தான், தொகுதி வளர்ச்சி அடையும். புலிகேசி நகர் தொகுதியில் அகண்ட சீனிவாச மூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்திலேயே சிறந்த தொகுதியாகவும், வளர்ச்சி பணிகள் பரவலாக நடைபெற்ற தொகுதிகளில் ஒன்றாகவும் புலிகேசிநகர் தொகுதி விளங்கும் என்பதில் சந்தேகமில்லை என்று பிரார்த்தனையில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2023/04/1a23e907-790b-41bf-8c33-d85771bdf433.jpg)