பெங்களூரு, செப், 30: பி.வி. ஜெகதீஷ் அறிவியல் மையம் மற்றும் ஜவஹர்லால் நேரு கோளரங்கம் இணைந்து, ஜெயநகர் நேஷனல் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாள் [சனி மற்றும் ஞாயிறு] அறிவியல் திருவிழாவை “அறிவியல் செயல்” என்ற பெயரில் என்ஏஎல் விஞ்ஞானி டாக்டர் வி.சுபா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
நேஷனல் கல்லூரியில் 1968 முதல் 1972 வரை பி.எஸ்சி இயற்பியலில் படித்து தங்கப் பதக்கம் வென்றவர். இவர் உதவித் தொகை பெற்று என்ஏஎல்லில் படித்தவர். திருவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: வகுப்பறைகளில் அறிவியலைக் கற்றுக்கொள்வதற்கும் நடைமுறைக் கற்றலுக்கும் வித்தியாசம் உள்ளது. இத்தகைய விழாக்கள் அறிவியலில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற விழாவை பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட வேண்டும் என்றார்.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2023/09/1f1db837-b2a7-4402-a03c-524220d77a63.jpg)
கர்நாடக நேஷனல் கல்வி சங்கத்தின் செயலாளர் வெங்கடசிவரெட்டி பேசியது: பி.வி. ஜெகதீஷ் அறிவியல் மையம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கல்விக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாறும் மற்றும் ஊடாடும் நிறுவனம் ஆகும். இது ஒரு அருங்காட்சியகம், ஒரு டிஐஒய் ஆய்வகம் மற்றும் கற்றல் மற்றும் பொழுதுபோக்கு மையமாக உள்ளது. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றார்.
திருவிழாவில் இஸ்ரோ, இன்னோவேஷன் அண்ட் சயின்ஸ் புரமோஷன் ஃபவுண்டேஷன், பரம் இன்னோவேஷன் சயின்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், கர்நாடகா அறிவியல், டெக்னாலஜி புரமோஷன் சொசைட்டி, அகஸ்தியா சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன என்று ஜெகதீஷ் அறிவியல் மைய இயக்குநர் பேராசிரியர் பாரதி ராவ் தெரிவித்தார்.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2023/09/f61ef0a0-7799-489b-8a51-3ade67af3f2e-1.jpg)
2 நாள் அறிவியல் திருவிழாவில் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித வடிவிலான ரோபோக்கள், அறிவியலின் அடிப்படை ஃபார்முலா அடிப்படையிலான மாதிரிகள், சந்திரயான்-3யின் யதார்த்தமான மாதிரிகள், இரவு நேரத்தில் விண்வெளி கண்காணிப்பு உள்ளிட்ட பல இடம்பெற்றுள்ளன என்று பேராசிரியர் பாரதி ராவ் கூறினார். திருவிழா அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது.