பெங்களூரு, நவ. 25: தகவல், உயிரி, செமி கண்டக்டர் உள்ளிட்ட பல துறைகளில் கர்நாடகம் தற்போது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்று கர்நாடக தகவல், உயிரி தொழில்துறை அமைச்சர் டாக்டர் சிஎன் அஸ்வத்த நாராயணா தெரிவித்தார்.
பெங்களூரு எம்.எஸ்.ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம், ( MSRUAS ), பெங்களூர் ஆசியன் சொசைட்டி ஆஃப் இன்னோவேஷன் மற்றும் தென் கொரியாவின் ஆசியன் சொசைட்டி ஃபார் இன்னோவேஷன் அண்ட் பாலிசி (ஏஎஸ்பி) சார்பில் இந்திய அறிவியல் கழக அரங்கில் தொழில்துறை, கல்வித்துறை முழுவதிலும் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைத்து ஸ்டார்ட் அப்கள், தொழில்முனைவு மற்றும் பிராந்திய கண்டுபிடிப்புகள் தொடர்பான பல்வேறு சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 12 வது ஆண்டு மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது: வரும் நாட்களில் உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடிப்பதே எங்களது நோக்கம் என்றும், கரோனாவுக்கு பிந்தைய காலம் இதற்கான சிறந்த சூழலை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2022/11/IMG_20221125_105928.jpg)
மாநிலத்தில் உள்ள நமது இளைஞர்களுக்கு தொழில்களுக்குத் தேவையான தரமான கற்றல் மற்றும் நவீன திறன்களை வழங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளில் 15 பொது பல்கலைக்கழங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மாநிலம் முன்னணியில் உள்ளது, இதில் ஒரு அறிவியல் அணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உயர்கல்வித்துறையில் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன மென்பொருளை ஏற்றுக்கொள்ளும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பும் கூட்டாண்மையும் அவசியம். இதற்காக அரசாங்கம் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. கர்நாடகம் எடுத்த நடவடிக்கைகள் இன்று தேசிய அளவில் முன் மாதிரியாக மாறி வருகிறது. பல மாநிலங்கள் இன்னும் யோசிக்காத நிலையில் தெளிவான கொள்கைகளை கொண்டு வருகிறோம். மாநிலம் புதுமை மற்றும் திறமையான கொள்கைகளின் தொட்டில் என்று அமைச்சர் விளக்கினார்.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2022/11/IMG_20221125_105910.jpg)
நிகழ்ச்சியில் கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன தலைவர் டாக்டர் ஜேசு கிம், இந்திய அறிவியல் கழக டாக்டர் பிரஹலாத் ராமராவ், டாக்டர் பாலசுப்ரமணியம், ஏஎஸ்ஐபி தலைவர் யங் ஜூ கூ, அதுல் பத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.