பெங்களூரு, ஜன. 5: ஜாதி, மதம், மொழி கடந்து தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவிற்கு திரளாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளரும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழுத் தலைவருமான பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் வியாழக்கிழமை நடைப்பெற்ற தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழுவின் 3 வது கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: தெய்வப்புலவர் திருவள்ளுவர் 1330 குறள்களை வடித்து மானுவ வாழ்விற்கு சிறந்த வழியைக் காட்டியுள்ளார். அவர் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல. உலகில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வியலுக்கு வழிகாட்டி உள்ளார்.
எனவே அவரின் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுவது நமது கடமையாகும். ஜன. 15 ஆம் தேதி பெங்களூரு அல்சூர் ஏரிகரையில் அமைந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியில் திருவள்ளுவர் ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெறும் விழாவிற்கு தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், தெலுங்கர், மராட்டியர் உள்ளிட்ட அனைத்து மக்களும் ஜாதி, மதம், மொழி கடந்து திருவள்ளுவர் ஜெயந்தி விழாவிற்கு அனைவரும் திரளாக வர வேண்டும்.
இந்த விழாவை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுகின்றனர் என்று யாரும் கருதக் கூடாது. திருவள்ளுவர் அனைவருக்குமானவர். எனவே மாற்று கட்சிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மொழியினரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழர்கள் இந்த விழாவில் திரளாக கலந்து கொண்டு நமது பலத்தைக் காட்ட வேண்டும். அப்போதுதான் நமது பலத்தை அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் உணருவார்கள். எனவே தமிழர்கள் மட்டுமின்றி, அனைவரும் பெருவாரியாக கலந்து கொண்டு, திருவள்ளுவரை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முக்கிய பிரமுகர்களான ரகு தேவராஜ், கோபிசந்தர், ஜி. ராஜேந்திரன், கோபிநாத், தீனதயாள், கிருஷ்ணன், விஸ்வநாதன், விஜயன், குமார், ஜான் சந்திரன், தேவராஜ், ராஜசேகரன், கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.