பெங்களூரு, ஜூலை 3: ஜே.பி நகரில் உள்ள ஸ்ரீ சத்ய கணபதி ஷீரடி சாய் அறக்கட்டளை மூலம் குருபூர்ணிமா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள ஷீரடி சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரங்கள், மத சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
20,000 தேங்காய், 2,500 பூசணிக்காய், பலாப்பழம், 5,000 வெல்ல உருண்டை, 25,000க்கும் மேற்பட்ட பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட உலர் பழங்கள் மற்றும் எண்ணற்ற புதிய தானியங்களால் ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நிற இளநீராலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ சத்தியகணபதி ஷீரடி சாய் அறக்கட்டளையின் அறங்காவலர் ராம்மோகன் ராஜ் தெரிவித்தார்.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2023/07/0c8133c4-7e16-48d3-8c7c-12e1895817ed.jpg)
சாய்பாபாவிற்கு அலங்கரிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் பக்தர்களுக்கு வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு பூசணி, பலா மற்றும் இதர பழங்கள் உள்பட உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, சாய்பாபா விளையாட்டு உபகரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அந்த பொருட்கள் 500 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதாக ராமமோகன் ராஜ் தெரிவித்தார்.
குரு பூர்ணிமாவையொட்டி, குரு ஷீரடி பாபாவுக்கு அபிஷேகம், ஹோமம், பிரசாத சேவை, சர்வ சேவை உள்ளிட்ட அனைத்து வகையான வழிபாட்டு முறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
![](https://bangaloredinamani.com/wp-content/uploads/2023/07/f57e28b3-ea72-4492-a232-b37cb8212a9d.jpg)
ஸ்ரீ சத்ய கணபதி ஷீரடி சாய் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் குரு பூர்ணிமாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. இந்த முறை சாய்பாபாவை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் மேலும் கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்புகளுடன் நடைபெற்றன. சாய் பாபாவின் ‘சப்கா முக்ரிக் ஏக் ஹை’ (எல்லோருடைய முகமும் ஒன்றுதான்) என்ற கருத்தின் கீழ், ஏழை, படித்தவர் என்ற பாகுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.