பெங்களூரு, மே 6: கர்நாடகத்தில் காங்கிரஸ் அலை வீசுகிறது என்று திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பியுமான திருநாவுக்கரசரை வரவேற்று அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்தியில் மற்றும் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுகவின் தோழமை கட்சியாக திமுக உள்ளது. அதனால் கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை திமுக ஆதரிக்கிறது என்றார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர், கர்நாடகத்தில் தோல்வி அடைந்து விடுவோம் என பாஜகவினர் அச்சம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக பிரதமர் மோடி, பல முறை மாநிலத்திற்கு விஜயம் செய்து, தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டுள்ளார். பாஜகவினர் என்ன முயற்சி செய்தாலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்பது உறுதி என்றார். பேட்டியின் போது மாநில திமுக நிர்வாகிகள் விஸ்வநாதன், தயாளன் கே.என்.நாதன், ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.