பெங்களூரு, மே 3: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற திமுக பாடுபடும் என்று மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காந்திநகர் தொகுதியில் உள்ள சன்ரைஸ் சதுக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ்குண்டுராவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில திமுக அமைப்பாளர் ராமசாமி, காந்திநகர் காங்கிரஸ் பிரமுகர் சரவணன், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ந.இராமசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி, திமுகவின் தோழமை கட்சி என்ற முறையில், நாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற திமுக பாடுபடும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால்தான், தேசிய அளவில் பாஜகாவிற்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும். எனவே மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார்.