Bangalore Dinamani

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமதிப்பு: கர்நாடக மாநில திமுக கண்டனம்

பெங்களூரு, ஏப். 30: தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமதிப்பு செய்யப்பட்டத்தற்கு கர்நாடக மாநில திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக மாநில வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. கர்நாடகத்தின் அனைத்து பெருமைகளிலும் தமிழர்களின் பங்களிப்பு உள்ளது. கர்நாடக மாநிலத்திற்கும், இங்கு உள்ள கன்னடர்களுக்கும் விசுவாசமாக இருப்பவர்கள் தமிழர்கள். இந்த நிலையில் அண்மையில் சிவமொக்காவில் நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, அதனை அவமதிக்கும் செயல் நடைபெற்றுள்ள சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுகிறது.

அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருந்தப்போது, அதனை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்துமாறு கூறியுள்ளார். அப்போது அவருடன் இருந்த அண்ணாமலை, அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். தமிழை அவமதித்துள்ள இந்த சம்பவத்திற்கு கர்நாடக மாநில திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஈஸ்வரப்பா, அண்ணாமலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்துள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version