Bangalore Dinamani

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்: ந.இராமசாமி

பெங்களூரு, மே 8: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியில் உள்ள வீரப்பிள்ளை சாலையில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் ஆளும் கட்சியான பாஜகவின் ஆட்சியில் மக்கள் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர்.

எனவே நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும். இதற்கு அக்கட்சி பெரும்பான்மை தொகுதியில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தமிழர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், மக்கள் அமைதியாகவும், பொருளாதாரத்தில் சிறந்து விளங்க முடியும் என்றார்.

Exit mobile version