Bangalore Dinamani

ஒடுக்கப்பட்டவர்களின் மேன்மைக்காக உழைத்தவர் அண்ணல் அம்பேத்கர்: பைப்பனஹள்ளி ரமேஷ்

பெங்களூரு, ஏப். 21: ஒடுக்கப்பட்டவர்களின் மேன்மைக்காக உழைத்தவர் அண்ணல் அம்பேத்கர் என்று காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பைப்பனஹள்ளி ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு துபேனஹள்ளியின் அண்மையில் பிஇஎம்எல் ஒப்பந்த தொழிலாளர்களின் எஸ்.சி, எஸ்.டி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காக உழைத்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். அவரின் வழிகாட்டுதலை நாம் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அவரின் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் தொழிலாளர்களின் நலனில் காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்திற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். பொது நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் தங்களின் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். எனவே தொழிலாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்காக என்னை எப்போதும் அணுகலாம். உங்களுக்கு உதவ நான் எப்போதும் ஓடிவருவேன் என்றார்.

Exit mobile version